Monday, February 25, 2008

சிறப்புக்குடைய எழு பிறப்பு எனும் ஏழாம் பிறப்பு

மனிதன் நிச்சயமாகச் சிறப்புக்குடையவன்தான்

தன் பெருமை அறியாத மயக்கம்தான் அவனை மிருக குணத்தில் ஆக்கியுள்ளது. இறை குணம் தன்னைக் காட்டாது . அதைத் தேடி அடைய வேண்டியது ஒவ்வொரு மனுவுக்கும் கடமையாயுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.

எழுபிறப்பும் ஏமாப்புடைத்து என்பது வள்ளுவம் வகுத்தவழி.

ஏழாம் பிறப்பு ஒன்றை மனிதன் அடையவேண்டும்.

அது இறந்து இறந்து பிறக்கும் புது பிறப்பு அல்ல.

பிறக்கும் போது சவமாகத்தானே வந்தோம். கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு அனைத்தும் கொண்டிருந்தாலும் உயிரற்ற பொருளாய் வந்தோம்.

முதற்பிறப்பு பிறந்தது சவம் எனவே பிர+சவம் என்ற பேராயிற்று.

அறிவு கொண்டோம். இரண்டாம் பிறப்டைந்தோம்.

கண், காது, மூக்கு, வாய், உணர்வு அனைத்தும் உயிர் பெற்று மனிதனாகத் தகுதியடைந்தோம்,

மூன்றாம் பிறப்பு அன்னையை அறிந்தோம் அவள் தரும் பாலுக்காக. அவளாள் அனைத்து சுற்றம் அறிந்தோம்,

நான்காம் பிறப்பு மிட்டாய்க்கு மட்டும் ஆசைப்படும் தீனிப் பிறப்பு, செல்வங்கள் அனைத்தும் இருந்தாலும் அதன் மதிப்பு அறியாது மிட்டாய் இனிப்புதான் உலகத்தின் அதிசிறந்த பொருள் என்ற மாயையில் காசு வேண்டுமா, மிட்டாய் வேண்டுமா என்றால் மிட்டாயைத் தேடும் அறிவில் இருந்தோம்,

ஐந்தாம் பிறப்பு காசைத் தேடிக் கொண்டால் இனிப்பு சாம்ராஜ்யத்தையே தனதாக்கிக் கொள்ளலாம் என்று மிட்டாயை விட்டு பொருள் தேடும் முகத்தான் கல்வி கேள்வியில் பிறந்தோம்.

ஆறாம் பிறப்பால் நன்மை தீமை அறிந்து பொருள் தேடும் வழியில் தடைகளை நீக்கிக் கொள்ள எந்தத் தவறையும் செய்யும் பகுத்தறிவின் பிறப்பை பாழுக்கு ஆக்கிக் கொள்ளும் ஒரு பிறப்பைப் பெற்றோம். இதோடு நின்று விட்டது மனிதப் பிறப்பு.

ஏழ் பிறப்பென்பது செத்து செத்து பிறப்பது அல்ல. தேகத்திலேயே ஒவ்வொரு முறையும் புதுப்பிறப்பாக கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் புதிய தேகத்தை அடைந்து இதோ ஆறு பிறப்பை அடைந்து மனிதனானோம். ஆனால் மனிதன்தான். அதற்குரிய செயல்தான் செய்கிறோமா என்றால் இல்லை. நிச்சயமாக இல்லை. மிருகத்தைவிட கேவலமான பல ரூபங்களை எடுக்கும் வல்லமையைக் கொண்டோம்.

ஏழாம் பிறப்பு ஒன்று பாக்கியிருக்கிறது. அது தேவனாகப் பிறப்பது. மனிதன் இறைவனாக ரூபம் கொள்ளும் ஒரு அதிசயப் பிறப்பு அது. இறைவன் எங்கோ ஆகாசத்தில் இல்லை. நாமே இறைவன். அதை அறியமட்டும் நம்மால் முடியவில்லை. இது சாபமா ? வரமா ?

முடிவு அவரவர் கையில்.

No comments: